ரஷ்ய நிதியுதவியில் இயங்கும் செய்தித் தளங்களை முடக்கியது மற்றுமொரு நிறுவனம்!
ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் சர்வதேச அளவிலுள்ள செய்தி ஊடகங்களை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 17ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன், பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்தி வருகின்றன.
அதன்படி ரஷ்யாவின் செய்தி ஊடகங்கள் இனி யூடியூப் பக்கங்களில் இடம் பெறாது. இது ஆர்டி, ஸ்புட்னிக், டாஸ் உள்ளிட்ட பல ரஷ்ய செய்தி நிறுவனங்களுக்கு பெரும் வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இப்போது வன்முறை நிகழ்வுகளின் கொள்கையின் கீழ் வந்துள்ளதாகவும், அதன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யூடியூப் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஷாத் ஷாட்லூ தெரிவித்துள்ளார்.
ஆயினும் சர்வதேச அளவில் எந்தெந்த சேவைகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், அவை எப்போது நீக்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க யூடியூப் நிறுவனம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
