உக்ரைன் ரஷ்ய யுத்தத்தில் மரியுபோல் நகரில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்!
ரஷ்யப் படைகள் தொடர்ந்து மக்கள் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி யுத்தம் தொடங்கியதில் இருந்து இதுவரை மரியுபோலில் மட்டும் சுமார் 2,100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களை தாக்கி வருகிறது. தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷ்யா வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மரியுபோல் மீது ரஷ்ய படைகள் 100 இற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், அந்நகரத்தில் 22 குண்டுவெடிப்பு சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அங்கு குடிநீர், மற்றும் உணவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.தொலைபேசித் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும் 40 ஆயிரம் பேர் அந்நகரில் சிக்கியுள்ளனர்.
இதனிடையே, மேற்கு உக்ரைனில் உள்ள யாவோரிவ் இராணுவ பயிற்சி மைதானத்தின் மீது ரஷ்ய போர் கப்பல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தப் பயிற்சி மையம் உக்ரைனிய இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் பிற கூட்டணி நாடுகளின் இராணுவ பயிற்சியாளர்கள் மூலம் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் 180 வெளிநாட்டு கூலிப்படைகள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனில் கூலிப்படையாகக் கருதப்படும் வெளிநாட்டினர் கொல்லப்படுவது தொடரும் என்றும் ரஷியா கூறியுள்ளது.
