கீவிலுள்ள வணிக வளாகத்தின் மீதான தாக்குதலில் ஏராளமான வாகனங்கள் மற்றும் பல உயிர்கள் பறிபோயுள்ளன!
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள வணிக வளாகத்தின் மீது ரஷ்ய படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.
நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 08 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் நொறுங்கின. அதனால் கீவில் இன்று முதல் புதன்கிழமை காலை வரை புதிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மேயர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான போர் 26 ஆவது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ரஷ்யா, தலைநகர் கீவ் மற்றும் மரியுபோல் நகரங்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
சூப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. இதில் பொதுமக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.
ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் கடுமையாக எதிர்த்தாக்குதல் நடாத்தி வருகின்றனர். உக்ரைன் இராணுவ வீரர்கள் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, சரணடைய வேண்டும், இல்லையெனில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்தது.
ஆனால் சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என உக்ரைன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
