ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு சென்ற போர்க்கப்பல் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்
காஸ்பியன் கடலில் உக்ரைன், மேற்கொண்ட தொலைதூரத் தாக்குதலில், ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களைக் கொண்டு சென்ற கப்பல்கள் மற்றும் ஒரு போர்க்கப்பலை இலக்காகக் கொண்டு வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைத்தளமான X-ல் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், “காஸ்பியன் கடலில் மேற்கொள்ளப்பட்ட தொலைதூரத் தாக்குதல்கள் மூலம் உக்ரைன் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, ஈரானிலிருந்து இராணுவச் சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல்களும், ஒரு போர்க்கப்பலும் தாக்குதலுக்கு இலக்காகின,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய கடற்படைத் தளங்கள்
காஸ்பியன் கடல், உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் காஸ்பியன் கடலில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளங்கள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்திருந்தது.
மேலும், கடந்த டிசம்பர் மாதம், ஈரான்–ரஷ்யா இடையிலான இராணுவச் சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா தடைவிதித்திருந்த இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை அறிவித்திருந்தது.
பகுப்பாய்வாளர்களின் தகவலின்படி, ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவ உபகரணங்களை கொண்டு செல்ல ரஷ்யா, அஸ்ட்ராகான் மற்றும் ஓல்யா துறைமுகங்களை முக்கியமாகப் பயன்படுத்தி வருகிறது.
மேலும், ட்ரோன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளும் நீண்டகால ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன. எனினும், ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள இந்தக் கூற்றுக்கு ரஷ்யா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |