ஆப்கானின் மனிதாபிமான உதவிக்கு 600 மில்லியன் டொலர் நிதி கோருகிறது ஐ.நா
ஆப்கானிஸ்தானில் பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கை செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, அந்த நாட்டிற்கு 600 மில்லியன் டொலருக்கும் அதிகமான டொலர் நிதி உதவியை கோரியுள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் பாகிஸ்தானில் இருந்து சென்ற முதலாவது பயணிகள் விமானம் தலைநகர் காபூலில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள நிலையில், அந்த நாட்டு மக்களுக்கான சர்வதேச உதவிகளை பெறும் வகையிலான மாநாடு ஜெனீவாவில் இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், பல தசாப்த கால யுத்தம், துன்பம் மற்றும் பாதுகாப்பின்மைக்குப் பின்னர் ஆப்கான் மக்கள் மிகவும் ஆபத்தான தருணத்தை எதிர்கொள்கின்றனர் என கூறியுள்ளார்.
ஆகவே ஆப்கானில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கான அவசியமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி, பேரழிவான கட்டத்தை நெருங்கி வருவதாகவும் அவர்களுக்கு உயிர்கொடுப்பதற்கான தீவிரமான தேவை காணப்படுவதாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள், அடுத்த வேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் என்பதே தெரியாது இருக்கின்றனர் எனவும் வறுமை விகிதம் அதிகரித்துவருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
அடிப்படையான பொதுமக்களுக்கான சேவைகள் முற்றுமுழுதாக செயலிழக்கும் நிலைமை காணப்படுவதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறிவருவதாக ஐ.நா பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆப்கானிஸ்தானில் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக கடுமையான வறட்சி நிலவிவருவதால், இம்மாத இறுதிக்குள் பலருக்கு உணவு கிடைக்காமல் போகலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் மக்களை தடையற்ற வகையில் அணுகுவதற்கான வாய்ப்பை உதவிப் பணியாளர்களுக்கு தலிபான்கள் வழங்க வேண்டும் எனவும் அன்டோனியோ குத்தேரஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஒகஸ்ட் மாதம் கைப்பற்றுவதற்கு முன்னரே மோதல்கள் காரணமாக 05 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதன்பிரகாரம் நாடாவிய ரீதியில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்தை தாண்டியுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் மக்கள் கடுமையான வறட்சி மற்றும் உணவுப் பற்றாக்குறையும் சமாளிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே தலிபான்கள் ஆப்கானிஸ்தனை கைப்பற்றிய பின்னர் பாகிஸ்தான் தலைநகரில் இருந்து முதலாவது பயணிகள் சேவை விமானம் காபூல் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது.
பாகிஸ்தானின் அரச விமான சேவையான பாகிஸ்தானின் சர்வதேச ஏயார்லயன்ஸ் விமானம் மூலம் கணிசமான பயணிகளுடன் குறித்த விமானம் காபூல் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அத்துடன் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச ஸ்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் உறவினர்களான ஆப்கானிஸ்தான் பிரஜைகள் பலர் உட்பட 70 பயணிகளுடன் காபூல் விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் நோக்கி குறித்த விமானம் பயணமாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விமான சேவைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.