இலங்கை தொடர்பில் ஐ.நாவின் கரிசனை - சுமந்திரன் வெளியிட்ட தகவல்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ள போதிலும், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கவனம் செலுத்தி வருவது வரவேற்கத்தக்க விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதன் பாதிப்புகளை உணர்ந்தவர்கள் என்ற வகையில், உக்ரைன் - ரஷ்ய நாடுகளுக்கிடையிலான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு தாங்களும் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில், இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணம் - உடுப்பிட்டியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட எம்.ஏ. சுமந்திரன், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான அழுத்தங்கள் நாடளாவிய ரீதியில் வலுப்பெற்று வரும் நிலையில், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் சரியான தீர்மானமொன்றை எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.