இலங்கைக்கான ஆதரவு! ஐ.நா வழங்கியுள்ள உறுதிமொழி
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உறுதியளித்துள்ளார்.
ஐ.நாவுக்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான சுமித் தஸநாயக்கவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தூதுவரும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான சுமித் தஸநாயக்க ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடு
இச்சந்திப்பின்போது இலங்கையின் அண்மையகால முன்னேற்றங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்த நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தஸநாயக்க, இருதரப்பு நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றுடன் இலங்கை தொடர்ந்து பேணிவரும் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் தஸநாயக்க மீள உறுதிப்படுத்தினார்.
அதேவேளை இலங்கையின் ஒத்துழைப்பு தொடர்பில் பாராட்டை வெளிப்படுத்திய உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தமது அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |