சஜித்தின் அழைப்பை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சி! காரணமானார் ரணசிங்க பிரேமதாச
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இந்த ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் பங்கேற்காது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மே முதலாம் திகதி பௌத்த மத வழிபாட்டிற்குரிய புனிதமான முழு நிலவு போயா தினத்துடன் ஒத்துப்போவதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல கடிதம் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை
போயா தினத்தில் மே தினம் அமையும் போது அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற கட்சியின் முன்னைய தீர்மானத்திற்கு இணங்கவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இத்தகைய சந்தர்ப்பங்களில் அரசியல் நிகழ்வுகளைத் தவிர்த்து, மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்ததை தலதா அத்துகோரல தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
வெற்றியடைய வாழ்த்து
இதன் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தி அல்லது வேறு எந்தக் கட்சியும் ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும், அவர்களின் மே தின முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |