அமெரிக்காவுக்கு செலுத்திய பல லட்சம் டொலர்களும் மாயம்! அரசாங்கத்திற்கு அடுத்த தலையிடி
இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் சேவைக்கு (US Post) வழங்கிய கொடுப்பனவில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடி குறித்த தகவல்களை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (28) வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி குறித்து விளக்கும் போதே தபால் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த மோசடி பற்றிய விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
600,000 டொலர்கள்
இதன்படி, இலங்கைத் தபால் திணைக்களத்தினால் அமெரிக்கத் தபால் சேவைக்கு செலுத்தப்பட்ட சுமார் 600,000 முதல் 625,000 வரையான அமெரிக்க டொலர் பணம், குறித்த தரப்பினருக்கு சென்றடையவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிதி முறைகேடு தொடர்பாக தபால் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இணைந்து ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு
நிறுவன மட்டத்தில் இவ்வாறான தவறுகள் அல்லது முறைகேடுகள் நடக்கும் போது அவை குறித்து விரிவாக ஆராயப்படுவதாகவும், நிதி அமைச்சும் இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த நிதி விடுவிப்பு இடம்பெற்றுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உள்வாரியான விசாரணைகள் நடத்தப்படுவதற்கு முன்னரே குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |