கொட்டகலையில் அமைதியின்மை - காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்
எரிவாயு சிலிண்டரை வழங்கக் கோரி ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கொட்டகலை பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டனர்.
எரிவாயு சிலிண்டர்களை வீதியில் வைத்து எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு கோரினர்.
இதன் போது நுவரெலியா பகுதிக்கு எரிவாயு எடுத்துச் சென்ற எரிவாயு பாரவூர்தியை மறித்து ஆர்ப்பாட்டகாரர்கள் எரிவாயு வழங்க கோரி கோசமிட்டனர்.
இதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
அந்த பாரவூர்தியை சுற்றி வளைத்த ஆர்ப்பாட்டகாரர்கள் தமக்கு எரிவாயு விரைவில் விநியோகிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.
இதனையடுத்து திம்புள்ள – பத்தனை காவல்துறையினர் அங்கு விரைந்து எரிவாயு பாரவூர்தியில் இருந்த எரிவாயு சிலிண்டர்களில் 60 எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் இறக்கி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு வழங்கினர்.
சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் நுவரெலியா – ஹட்டன் வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த வாகன சாரதிகளும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.







