ஊரடங்குச்சட்டம் நடைமுறை
புதிய இணைப்பு
மறு அறிவித்தல் வரும் வரையில் ராகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ராகம காவல்துறை எல்லைக்குட்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் மறு அறிவிப்பு வரும் வரை காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஃப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.
அதன்படி 246/கெண்டலியத்த வீதி - மேற்கு, 246/சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181/ஜி தம்புவ கிராம சேவகர் பிரிவுகள் அடங்கும்
நான்காம் இணைப்பு
மஹர சிறைச்சாலையில் இன்று (1) மாலை ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் குடியிருப்பாளர்களும் காவல்துறைத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் கலவரம்
பாதுகாப்பு அதிகாரிகள் சில அடிகள் முன்னேறி, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் கலவரம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் குடியிருப்பாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
இன்று பிற்பகல் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கைதிகளை பார்வையிட வந்த உறவினர்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இருப்பினும், கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் இன்னும் அப்பகுதியில் தங்கியுள்ளனர்.
காவல்துறையின் தீயணைப்பு வாகனம்
அப்பகுதிக்கு காவல்துறையின் தீயணைப்பு வாகனம் வருகை தந்துள்ளது.

இரண்டாம் இணைப்பு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதிகள் வைத்த தீ
கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை அதிகாரபூர்வமான எவ்வித அறிவிப்பையும் வௌியிடவிவ்லை.
முதலாம் இணைப்பு
மஹர சிறைக்குள் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தகவல் வந்ததையடுத்து, அப்பகுதியில் மேலதிக படையினரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.
சிறைக்குள் நிலவும் சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் பல சிறப்பு காவல்துறை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
சிறைச்சாலையை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
சிறையைச் சுற்றியுள்ள பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது; அமைதியைப் பேணுவதற்கும், எந்தவொரு பதற்றமும் அதிகரிக்காமல் தடுப்பதற்கும் காவல்துறை மற்றும் விசேடஅதிரடிப்படை (STF) நிறுத்தப்பட்டுள்ளன

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |