கொழும்பு கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்
வெள்ளவத்தை தொடக்கம் காலி முகத்துவாரம் வரையான கடற்கரையில் 10க்கும் மேற்பட்ட ஆமைகளின் சடலங்கள் வழமைக்கு மாறாக நேற்றும் (21ம் திகதி) இன்றும் (22ம் திகதி) கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று 02 ஆமைகளின் சடலங்கள் கரை ஒதுங்கியதுடன் மேலும் 07 இற்கும் அதிகமான ஆமைகள் பாதுகாப்பு பிரதேசமாக குறிப்பிடப்பட்டுள்ள காலி முகத்துவாரத்திலும், ஆமைகள் அடிக்கடி வரும் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை கடற்கரைகளிலும் கரை ஒதுங்கியுள்ளன.
கண்கள் வீங்கி இரத்தம் வழிந்து

அசாதாரணமாக கரை ஒதுங்கிய இந்த ஆமைகளில் சிலவற்றின் கண்கள் வீங்கி, சில உடல்களில் இருந்து இரத்தம் வழிந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்த மீன்களும் கடற்கரையில் ஒதுங்குவதாக தெரியவருகிறது.
கடற்படையினரால் வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் நாரா முகவர் நிலையம் இன்று சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் மற்றும் கடற்படையினருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீதிமன்றின் உத்தரவு

அதன்படி, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ததுடன், காலி முகத்துவாரத்தின் கரையோரத்தில் குவிக்கப்பட்டிருந்த 04 ஆமைகளின் சடலங்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டன.
அங்கு, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, இந்த ஆமைகளின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெல்லன்வில கால்நடை வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.