அச்சம் கொள்ளாதீர் - ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்
சேதன உரங்களை பயன்படுத்துவது ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையொன்றை கட்டியெழுப்புவதற்காகவாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
´காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுகளுடன் ஒரு பசுமை இலங்கையை உருவாக்குதல்´ தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
நாட்டின் விவசாயத்துறையில் முழுமையாக சேதன உரப் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். முந்தைய அரசாங்கங்கள் சேதன உரப் பயன்பாட்டை பிரபலப்படுத்த முயற்சித்த போதும் அதைத் தொடர்ச்சியாக பேண முடியவில்லை.
சேதன உரங்களைப் பயன்படுத்துவதால் விளைச்சல் குறைந்து வருமானத்தில் மாற்றம் ஏற்பட்டால் உத்தரவாத விலையை விட அதிக தொகைக்கு நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது.
விவசாயிகள் அதற்கு பயப்படத் தேவையில்லை. நுகர்வோருக்கு நடைமுறையில் உள்ள விலையில் அரிசியை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அதற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் சேதன உரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் அதற்குத் தேவையான வசதிகளை வழங்க அரசு தயார் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.