இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சவால்மிக்க நாடாக இலங்கை மாறியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பொதுச் சேவைத்துறையில் காணப்படும் ஊழலானது இலங்கையில் செயற்படும் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள முதலீட்டுக்கான சூழல் தொடர்பான அறிக்கையில், அரச துறைகளில் காணப்படும் ஊழல்கள் வெளிநாட்டு முதலீடுகளை தடுக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் எதிர்வுகூறமுடியாத பொருளதார கொள்கை காரணமாக பொருட்களின் பரிவர்த்தனை செலவு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அரசாங்க நிர்வாக சேவையின் வினைதிறனற்ற தன்மை மற்றும் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையற்ற கொள்கைகளும் மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்களை மீள ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்த விரும்பவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு போதுமான சட்டம் மற்றும் விதிகள் காணப்படுகின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் பலவீனம் மற்றும் முரண்பாடு காணப்படுகின்றது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பல்வேறு உள்ளக மட்டத்தில் ஊழல் காணப்படுவது குறித்து அமெரிக்க பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவலை வெளியிடுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் கொரோனா தொற்றுக் காரணமாக அதனை எட்டமுடியவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து, எந்தவொரு அரசியல் கட்சிகளும் ஊழலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடரவில்லை எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.