முற்றுகையை உடைத்த ஈரானிய கப்பல்கள்...! மீண்டும் ஈரானைத் தாக்க தயாராகும் ட்ரம்ப்
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
ஹோர்முஸ் நீரிணையை நெருங்கும் எந்தவொரு இராணுவக் கப்பலும் தற்போதைய போர் நிறுத்தத்தை மீறுவதாகக் கருதப்பட்டு, "கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானியக் கொடியுடன் கூடிய மூன்று கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து அரபிக் கடலுக்குள் நுழைந்துள்ளதாக 'மரைன் ட்ரஃபிக்' (MarineTraffic) தரவுகள் தெரிவிக்கின்றன.
ட்ரம்பின் கோபத்தையும் பிரதிபலிக்கிறது
ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து கடல்வழிப் போக்குவரத்தையும் தடுக்கப்போவதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 13 திங்கட்கிழமை (இன்று) கிழக்கு நேரப்படி காலை 10 மணி முதல் இந்த முற்றுகை நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்திய சர்வதேச கடல் பகுதியில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் அமெரிக்கப் படைகள் இடைமறிக்கும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் டொனால்ட் ட்ரம்பின் திட்டம், ஈரானியப் போரை மேலும் தீவிரப்படுத்துவதோடு, அமைதி ஒப்பந்தம் கிடைக்காததால் ஏற்பட்ட "ட்ரம்பின் கோபத்தையும் பிரதிபலிக்கிறது" என்று பாதுகாப்பு ஆய்வாளர் ஜஸ்டின் க்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க இராணுவ முற்றுகையை நடைமுறைப்படுத்துவதில் பிரிட்டன் பங்கேற்காது என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |