மின்சாரசபைக்கு எரிபொருள் விநியோகம் - விதிக்கப்பட்டது நிபந்தனை
தேவையான அமெரிக்க டொலர்களை வழங்கினால் மாத்திரமே இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மின்சக்தி அமைச்சுக்கு தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் கடந்த வாரம் மூடப்பட்டதாகவும் அவற்றை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3000 மெற்றிக் தொன் டீசல் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை தேவையான டொலர்களை வழங்கினால், எரிபொருளை இறக்குமதி செய்து வழங்க முடியும் எனவும், அதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இல்லை எனவும், தற்போதுள்ள எரிபொருளை மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தினால் வாகனங்கள் இயங்க முடியாது எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால், ஒரு நாளைக்கு சில மணி நேரம் மின்வெட்டு மூலம் மின் விநியோகத்தை சீர் செய்ய முடியும், ஆனால் வாகனம் விடயத்தில் அத்தகைய நடவடிக்கையை எடுக்க முடியாது என்று அவர் கூறினார்.
மின்சார சபையிடமிருந்து 920 மில்லியன் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து 6500 மில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது.எரிபொருள் விநியோகம் தேவைப்பட்டால், விரைவில் பணம் செலுத்துமாறு இரு நிறுவனங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் எரிபொருள் விநியோகத்திற்காக டொலர்களை வழங்கியதாகவும், ஆனால் மின்சார சபை அவ்வாறான டொலர்களை வழங்கத் தவறியதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் பாரிய டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் அவசர எரிபொருள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என தெரிவித்த அமைச்சர், தேவையான அமெரிக்க டொலர்களை வழங்கினால் மாத்திரமே எரிபொருளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.