வளைகுடாவில் பதற்றம்! ஈரானிய கொடி ஏந்திய கப்பல் மீது அமெரிக்க போர்விமானம் தாக்குதல்
ஓமான் வளைகுடாவில் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை மீற முயன்ற ஈரானிய கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை போர்விமானம் தாக்குதல் நடத்தி அதனைச் செயலிழக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய துறைமுகங்களை நோக்கிச் சென்ற இந்த கப்பல், அமெரிக்கப் படைகளின் முற்றுகை விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அமெரிக்கப் படையினரால் பலமுறை எச்சரிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
போர்விமான தாக்குதல்
எனினும், கப்பலின் பணியாளர்கள் அந்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் செயற்பட்டமையால் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

Image Credit: Warrior Maven
அதன்போது, அமெரிக்காவின் F/A-18 சூப்பர் ஹார்னெட் ரக போர்விமானம் அந்த எண்ணெய் கப்பலின் சுக்கான் பகுதியை நோக்கி தனது 20 மிமீ பீரங்கியால் பலமுறை சுட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரிக்கும் பதற்றம்
இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, இலக்கு வைக்கப்பட்ட அந்த ஈரானிய எண்ணெய் கப்பல் தற்போது ஈரானை நோக்கிப் பயணிக்கவில்லை என்பதை அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

Image Credit: The Hill
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |