அமெரிக்கா செல்பவர்களுக்கு வந்தது புதிய கட்டுப்பாடு
அமெரிக்காவில் இதுவரை 8 பேருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன. அவ்வகையில், அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பயணிகளும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற (கொரோனா நெகட்டிவ்) சான்றிதழை எடுத்து வரவேண்டும் என அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய நெறிமுறை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக பயண கட்டுப்பாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
புதிய திருத்தப்பட்ட உத்தரவின்படி, டிசம்பர் 6 அன்று 12:01 அல்லது அதற்குப் பிறகு வெளி நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குப் புறப்படும் விமானங்களில் பயணிக்கும் பயணிகள், விமானம் புறப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டும்.