அமெரிக்கா ஆயுதம் தாங்கிய வீரர்கள் இலங்கைக்குள் எதற்கு - விமலின் கேள்வியால் புதிய சர்ச்சை
அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்த போது, சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் இருந்தவர்களின் ஆயுதங்கள் களைந்த பின்னர், அமெரிக்காவின் அதிகாரிகள் ஆயுதங்களுடன் அலுவலகத்துக்குள் பிரவேசித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றில் உரை நிகழ்த்தியபோது இந்த தகவலை வெளியிட்டார்.
இதன் மூலம் சிறிலங்காவின் புலனாய்வுத்தரவுகள் அனைத்தும் அமெரிக்கப் புலனாய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்தே முடிவுகள் எடுக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பயண நோக்கம் என்ன
முன்னதாக 2001 ஆம் ஆண்டு இவ்வாறான நிலைமை தோற்றுவிக்கப்பட்டபோதும், அது பின்னர் 2004ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்தின் இந்து பசுபிக் பாதுகாப்பு துணை உதவிச்செயலாளர் ஜெடிடியா ரோயல் தலைமையில், இலங்கைக்கு வந்தவர்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இவர்களின் இலங்கைக்கான பயண நோக்கம் என்ன? அதிபருடனும், பாதுகாப்பு செயலாளருடன் அவர்கள் எது குறித்து பேசினார்கள் என்ற விடயத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் வெளிப்படுத்தவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
