உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்...! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு
ஈரானிலுள்ள அமெரிக்கப் பிரஜைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாடு முழுவதும் பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் தகவல் தொடர்புத் தடைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேலும் தெரியவருகையில், ஈரானில் தற்போது தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள், வீதி மறிப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்து இடையூறுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
ஈரான் அரசாங்கம் கைபேசி, தரைவழித் தொலைபேசி மற்றும் தேசிய இணைய வலையமைப்புகளுக்கான அணுகலைத் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகின்றது.

இதன் காரணமாகத் தொடர்ச்சியான இணைய முடக்கங்களை எதிர்பார்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு, ஈரானுக்கான மற்றும் ஈரானிலிருந்தான விமான சேவைகளை சர்வதேச விமான நிறுவனங்கள் தொடர்ந்து மட்டுப்படுத்தி வருவதுடன், பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான சேவைகள்
மிகக்குறுகிய கால அறிவித்தலுடன் விமான சேவைகள் ரத்து செய்யப்படலாம் என்பதால், இது குறித்து விமான நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்காமல், ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுவதற்கான சொந்தத் திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான சூழல் நிலவினால், தரைவழியாக ஆர்மீனியா அல்லது துருக்கிக்குச் செல்வதைக் கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு வெளியேற முடியாதவர்கள், தங்களின் இருப்பிடங்களில் பாதுகாப்பான பகுதியைத் தெரிவு செய்து அங்கேயே தங்கியிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான தொடர்பு
போதுமான அளவு உணவு, நீர் மற்றும் மருந்துகளைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டமாகத் திரளும் இடங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பொது இடங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் (Low profile), சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகளை எப்போதும் மின்னூட்டம் (Charge) செய்து வைத்திருக்குமாறும், குடும்பத்தினருடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய அறிவிப்புகளைப் பெற்றுக்கொள்ள “Smart Traveler Enrollment Program (STEP)” எனும் திட்டத்தில் இணையுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மேலதிக ஆலோசனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |