ரஷ்யாவில் நடக்கும் சந்திப்புகளை துல்லியமாக பகிரும் அமெரிக்கா! ஜெலென்ஸ்கி அறிவிப்பு
கடந்த சில நாட்களாக மொஸ்கோவில் நடைபெற்ற பல சந்திப்புகள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா தங்களுக்கு வழங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெலிகிராமில் பதிவிட்டுள்ள அவர், மொஸ்கோவில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்து அமெரிக்கத் தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அதில் யார் யார் கலந்துகொண்டனர் என்ற விவரங்களை வெளியிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கு நன்றி
அத்துடன், இந்த தகவலைப் பகிர்ந்ததற்கும் ரஷ்யாவுடனான உரையாடலில் சரியான தொனியைப் பயன்படுத்தியதற்கும் அமெரிக்காவிற்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேட்டோ உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ரஷ்யாவை எச்சரிப்பதற்காக சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ரஷ்ய நடவடிக்கைகள்
கிரெம்ளின் இந்த செய்தியை நிராகரித்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேட்டோ நாட்டைத் தாக்க மாட்டார் எனக் கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த செய்தியை நிராகரித்திருந்தார்.

எனினும், ராட்க்ளிஃபின் சந்திப்பின் போது நேட்டோ நாட்டிற்கு எதிரான ரஷ்ய நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ஈரானுக்கான ரஷ்யாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |