ஈரான் விமான நிறுவனத்திற்கு முகவராக செயற்பட்ட இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை!
ஈரானின் மகான் ஏர் (Mahan Air) விமான நிறுவனத்திற்கு விற்பனை முகவர்களாகப் பணியாற்றி வந்த இந்திய நிறுவனம் உட்பட 6 நிறுவனங்கள் மற்றும் சில தனிநபர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
ஈரான் நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்குத் தேவையான படைவீரர்களை ஏற்றிச் செல்வது மற்றும் ஆயுதங்களைக் கடத்துவது போன்ற செயல்களுக்குத் தனது பயணிகள் விமானங்களை மகான் ஏர் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கை
இதன் அடிப்படையில், இந்தியாவில் மகான் ஏர் நிறுவனத்தின் முகவராகச் செயல்பட்டு வந்த டெல்லி மற்றும் ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட ஸ்கீஸ் டிராவல்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

Image Credit: Bloomberg.com
இந்நிறுவனம் 2020-ஆம் ஆண்டு முதல் ஈரானிய நிறுவனத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றி வருவதாகத் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சீனாவைச் சேர்ந்த ஷாங்காய் விங்ஸ் மற்றும் ஷாங்காய் எலைட் இன்டர்நேஷனல், ரஷ்யாவின் ஏர் கார்கோ ஆகிய நிறுவனங்கள் மீதும், ஷாங்காய் விங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் டாங் ஷின்னுக்கு எதிராகவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இது தொடர்பாக அமெரிக்க திறைசேரி விடுத்துள்ள அறிக்கையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கோ அல்லது மகான் ஏர் நிறுவனத்திற்கோ நிதி, தளவாடம் மற்றும் வணிக ரீதியாக உதவி செய்பவர்கள் பயங்கரவாத அமைப்புகளுக்குத் துணைபுரிபவர்களாகவே கருதப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக மோதல்கள் நீடித்து வரும் சூழலில், இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |