உக்ரைன் மீது படையெடுக்கப்போகும் ரஷ்யா - எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன் (Antony Blinken) இன்று உக்ரைன் சென்றுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிளிங்கனின் உக்ரைன் பயணம் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடும் நோக்கிலேயே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்களை குவித்துள்ளது. மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்தப் பயணத்தின் போது உக்ரைன் அதிபர் வெலோடிமிடர் ஜெலன்ஸ்கியை அண்டனி பிளிங்கன் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் போது எல்லையில் ரஷ்ய படைகள் குவிப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் பெர்லின் செல்லும் பிளிங்கன் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் உக்ரைன் எல்லை பிரச்சினை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
ரஷ்யா படையெடுக்கும் பட்சத்தில் உக்ரைனுக்கு நோட்டோ ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.