ட்ரம்பின் வரி விதிப்பு : ஆட்டம் காணப்போகும் இலங்கையின் முக்கிய தொழிற் துறைகள்
இலங்கை மீதான அமெரிக்காவின் தீர்வை வரி அதிகரிப்பால் ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகள் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட அமைச்சில் நேற்று (20) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ”அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் அமெரிக்காவுக்கு பிரதானமாக ஏற்றுமதி செய்யும் ஆடை மற்றும் இறப்பர் உற்பத்திகளுக்கு ஓரளவேனும் பாதிப்பு ஏற்படும் என நாங்கள் நம்புகிறோம்.
330 மில்லியன் டொலர் வருமானம்
என்றாலும் ஏற்கனவே 44 வீதமாக அதிகரிக்கப்பட்ட வரி வரியை 30 வீதமாக குறைத்துக்கொள்ள எங்களுக்கு முடியுமாகியுள்ளபோதும் அது போதுமானதல்ல. அதனால் இந்த வரி அதிகரிப்பை மேலும் குறைத்துக்கொள்ள தேவையான பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.
நாட்டின் இறப்பர் உற்பத்தியில் நூற்றுக்கு மூன்றில் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்கிறோம். அதனால் எங்களுக்கு வருடத்துக்கு 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கிறது.
இந்த வரி அதிகரிப்பால் இந்த வருமானத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். என்றாலும் இந்த பாதிப்பை கட்டுப்படுத்திக்கொள்ள நாங்கள் பல்வேறு வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இறப்பர் ஏற்றுமதி
அமெரிக்காவுக்கு தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளும் இறப்பர் ஏற்றுமதி செய்து வருகின்றன. ஆனால் அமெரிக்காவின் வரி விதிப்பில் இந்த இரண்டு நாடுகளையும் விட எமக்கு குறைவாகும்.
அதனால் இந்த சந்தர்ப்பத்தில் எமது பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால் எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 வீத வரியைவிட வியட்னாம் போன்ற நாடுகளுக்கு குறைவாகவே வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அதனால் எமது தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்பை எவ்வாறு குறைத்துக்கொள்ள முடியும் என்பது தொடர்பில் நாங்கள் பல்வேறு வழிகளில் கலந்துரையாடி வருகிறோம்.
குறிப்பாக அமெரிக்க வரி அதிகரிப்பால் பாதிக்கப்படும் எமது தொழிற்சாலைகளை பாதுகாக்கும் பாெருட்டு மாற்று வழிகளாக அமெரிக்கா அல்லாத வேறு நாடுகளின் சந்தைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.
அதனால் இந்த வரி அதிகரிப்பால் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள தொழிற்சாலைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்பதை அந்த துறைசார்ந்தவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
