ரி20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது அமெரிக்கா
2026 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத் தொடரின் 'ஏ' பிரிவில் இன்று(07) நடைபெற்ற3-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை 29 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்றது.
தனி ஒருவராக போராடிய சூர்ய குமார் யாதவ்
இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா (0), இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் குறைந்த ஓட்டங்களில் வெளியேறினர்.

அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் தனி ஒருவராகப் போராடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 49 பந்துகளில் 84 ஓட்டங்களை (10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசினார்.
அமெரிக்க அணி தரப்பில் ஷாட்லி வான் ஸ்கல்க்விக் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்மீத் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி, பதிலுக்கு162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
போராடி தோற்ற அமெரிக்க அணி
அமெரிக்க அணி சார்பில் மிலிந்த் குமார் 34 ஓட்டங்களையும், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 37 ஓட்டங்களையும் மற்றும் சுபம் ரஞ்சனே 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.

பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய நிலையில், மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக சூர்ய குமார் யாதவ் தெரிவானார்.
இந்தப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரோகித் சர்மா,ஐசிசி தலைவர் ஜெய் ஷா இருவரும் கிண்ணத்துடன் நின்றமை குறிப்பிடத்தக்கது.

(images - espncricinfo)
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 12 மணி நேரம் முன்