தமிழர் வரலாற்றின் முக்கிய பிரகடனம் - இன்றோடு அகவை 46
நீண்டகால போராட்ட வரலாற்றைக்கொண்ட தமிழர்களின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரகடனங்களில் வட்டுக்கோட்டை பிரகடனம் தனக்கென்ற தனித்துவத்தோடு வரலாற்று வெளிகளின் பக்கங்களில் பதிவானது.
தமிழர்களுக்கென்றொரு தேசமும் அதன் இருப்பின் மீதான தேவையையும் நிறுவி தமிழர்களின் பூர்வீகமான மரபுவழி நிலத்தையும், பண்பாட்டையும் பாதுகாத்து, தமது தேசத்தில் தம்மைத் தாமே ஆட்சி செலுத்தி , சுதந்திரம் மிக்க தனித்தேசமாக தேசமாக மிளிரும் சுதந்திர வேட்கையோடு, 1976 ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி தந்தை செல்வா தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழர்களின் ஜனநாயக கோரிக்கைகளையோ தமிழர்கள் தனித்துவமான ஒரு தேசிய இனம் என்பதனையோ தென்னிலங்கையில் மாறி மாறி வந்த அரசுகளில் ஒன்று கூட ஏற்கத்துணியவில்லை. ஆனால் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடக் கூடிய இன, கலாசார, அடையாள அழிப்புகளை மாத்திரம் மும்முரப்படுத்தினர். தமிழர்களுக்கு எதிரான உரிமை மறுப்பும், இன அழிப்பும் நில அபகரிப்புகளும் தொடர்ந்தன.
இந்த நிலையில் தமிழர்கள் தனிநாடு கோர உந்தப்பட்டனர். அதற்கான அறைகூவல் களமாக வட்டுக்கோட்டைப் பிரகடனம் தன்னைப் பதிவு செய்து கொண்டது என்பதே மறுதலிக்க முடியாத ஒரு உண்மையாகும்.
குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழர்களுக்கான தனித்தேச போராட்டத்திற்கான அழைப்பை விடுத்த அன்றைய தலைவர்களின் அழைப்பின் தொடர்ச்சியாக கடந்து வந்த 46 ஆண்டுகளில் ஏராளமான வரலாற்றுப்பெறுகைகளையும் இழப்புகளையும் சந்தித்திருக்கிறது ஈழத்தமிழினம்.
இருந்த போதிலும் தன்மான வீறு கொண்ட தமிழன் தனது தேசத்திற்காகவும் தேசிய உரிமைகளுக்காகவும் உரமேறிப்போராட உந்துதலாய் இருந்த, இன்றைக்கு 46 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனத்தை வரலாற்றின் வழி பெருமிதங்களோடு கடந்து வந்திருக்கிறது தமிழினம்.