ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சடுதியாக விலகினார் வடிவேல் சுரேஸ்
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அறிவித்துள்ளார்.
தான் ஏற்பாடு செய்த மக்கள் கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளாமையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டம்
பதுளை – மடுல்சீமையில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக முன்னதாக அறிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுகயீனம் காரணமாக அதில் பங்கேற்க முடியாது என காலம் தாழ்த்தி அறியப்படுத்தியுள்ளார்.
எனினும், குறித்த சந்தர்ப்பத்தில், வெலிமடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சஜித் பிரேமதாச பங்கேற்றுள்ளார் என வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்காக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்ச்த செயற்பாடு தொடர்பில், அதிருப்தி ஏற்பட்டுள்ளமையால், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி,இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலகலை ஐக்கிய மக்கள் சக்திக்கு அறிவித்துள்ளதாக வடிவேல் சுரேஸ் கூறியுள்ளார்
