டொலரின் பெறுமதி அதிகரிப்பு : காரணத்தை வெளியிட்ட பிரதி அமைச்சர்
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை குறித்து நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கு அரசாங்கத்தின் கொள்கை அல்லது தவறான தீர்மானம் காரணம் அல்ல எனவும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையினால் உருவான உலகளாவிய நெருக்கடியின் விளைவே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலைகள்
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக எரிபொருள் விலைகள், எரிவாயு மற்றும் உர விலைகள், அத்துடன் கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி கட்டணங்கள் வேகமாக அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் டொலர் விலையும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் டொலர் விலையும் மாற்றமடைந்துள்ளது.
ஏற்றுமதிப் பொருட்களின் டொலர் விலையை விட இறக்குமதி பொருட்களின் டொலர் விலைகள் அதிகரித்தமை இலங்கையை பிரதானமாகப் பாதித்துள்ளது.
மேலும், உலகளாவிய ரீதியில் டொலரை ஸ்திரப்படுத்துவதற்கும் டொலருக்கு அதிக இலாபத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, டொலருக்கான தேவை அதிகரித்து, முதலீடுகள் டொலரை நோக்கி நகரும் போக்கு காணப்பட்டது.
சர்வதேச நாணய நிதியம்
இதன் காரணமாக ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் டொலர் வலுவடைந்துள்ளதுடன், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் அந்த விலைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருட்களுக்கான கொடுப்பனவுகள் மே மாதத்தில் செலுத்தப்பட வேண்டும், மே மாதமளவில் அது 521 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
எனினும், எதிர்வரும் 27ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் 2 தவணைகளின் பணத்தை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்வதற்காக அதன் செயற்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த 2 தவணைகளும் கிடைக்கும் என நம்புகின்றோம்.
இதுதவிர, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடமிருந்தும் மேலும் பல மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளது” என அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |