வரலஷ்மி விரதத்தை அனுஷ்டிப்பதன் அற்புத பலன்கள் என்னவென்று தெரியுமா....
மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இறைவனை மெய்யன்போடு வழிபடுதலே விரதம் என்ற நாவலர் வாக்குக்கமைய, வாழ்வு வளம் பெறவும் வாழ்நாள் சிறப்புறவும் பக்த அடியார்களால் இறைவனை நோக்கி ஏராளம் விரதங்கள் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம்.
செல்வங்களை அள்ளிக்கொடுக்கும் மஹாலஷ்மியின் நாமம் போற்றி எத்தனையோ விரதங்கள் அனுஷ்டிக்கப்பட்டாலும் அதில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக வரலஷ்மி விரதம் திகழ்கிறது.
ஆடி மாத வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் வரலஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது,அந்த வகையில் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி அதாவது இன்றைய தினம் உலகில் பறந்து வாழும் அம்பிகை அடியவர்களால் வரலஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
மஹாலஷ்மி விரதம்
தென்னிந்தியாவில் இந்த விரதம் வரலஷ்மி விரதம் என்ற பெயரிலும், வட இந்தியாவில் மஹாலஷ்மி விரதம் என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது சிறப்பான விடயமாகும்.
வரங்களை அள்ளித்தரும் வரலஷ்மி விரதத்தின் சிறப்புக்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்,
வரலஷ்மி விரதத்திற்கு இரு பொருள் உண்டு ஒன்று ஒன்று வரங்களை தரும் லஷ்மி தேவியை வழிபடும் நாள் என்றும், லஷ்மியை வீட்டிற்கு அழைத்து வரங்களை பெறுவதற்கு ஏற்ற நாள் என்று இன்னொரு பொருளிலும் சொல்லப்படுகிறது.
வரலஷ்மி என்பவள் செல்வ வளம், தைரியம், ஞானம், குழந்தை வரம் உள்ளிட்ட வரங்களை அருள்பவள் என்பதால் இந்த நன்நாளில் அஷ்டலஷ்மி வழிபாடு செய்து அம்பிகையின் வரங்களை பெறுவர்.
வரலஷ்மி விரதத்திற்கு புராணங்களில் பலவேறு கதைகள் கூறப்படுகிறது இந்த கதைகளின் படி, வரலஷ்மி விரதத்தை முறையாக அனுஷ்டித்து அம்பிகையை வழிபடுபவர்கள் செலவச் செழிப்புடனும் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்வர் என்பது நம்பிக்கை.
வரங்களை அருளும் மகாலஷ்மி
வரலஷ்மி விரதத்தினை அனுஷ்டிப்பதால் நல்ல ஆரோக்கியம், ஐஸ்வர்யம், செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.
தீமைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் செழிக்கும். தொழில் முடக்கம், பணப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
மன அமைதி கிடைப்பதுடன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த வரலட்சுமி விரத நன்நாள் இன்று (25).
இன்றைய நாளில் மகாலஷ்மியை வீட்டிற்கு அழைத்து, பூஜைகள் செய்து, எப்போதும் மகாலஷ்மியின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோமாக, வரங்களை அருளும் மகாலஷ்மி அனைவர்க்கும் நல்வாழ்வை அருளுவாளாக.
