மட்டுப்படுத்தப்பட்ட நபர்களுடன் இடம்பெற்றது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு நேற்று (24) அனுமதிக்கப்பட்ட 51 நபர்களுடன் பொலிசார், இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டுடன் இடம்பெற்றது.
கடந்த (17) ஆம் திகதி கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டு முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் கடந்த ஏழுநாட்கள் கடல்நீரில் எடுக்கப்பட்ட தீர்த்தத்தில் அணையா விளக்காக எரிந்த தீர்த்தம் மற்றும் மடைப்பண்டங்களுடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு நேற்று அதிகாலை (24) எடுத்துவரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு பூசைகள் நடைபெற்றன.
ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தவோ அல்லது ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவோ பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
ஆலயத்திற்கு செல்லும் இரண்டு பிராதன வீதிகளிலும் படையினர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அனுமதிக்கப்பட்ட 51 பேர் மாத்திரம் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.
பொலிசார், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் பூசைகள் நடைபெற்றன.
இதேவேளை பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வீதியில் வருகைதந்த போதும் வீதியில் உள்ள படையினரின் வீதிசோதனை நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
ஆலயத்தினை அண்மைய பகுதிகளில் உள்ள மக்கள் சிலர் வளாகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் அவர்கள் ஆலயத்திற்கு செல்லும் வீதியின் சந்திகளில் தோங்காய் உடைத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றியிருந்தனர்.



