சுகாதார நடைமுறைகளிற்கு ஒத்துழைக்காத உணவகம்- அதிகாரிகள் மேற்கொண்டள்ள உடனடி நடவடிக்கை!
வவுனியா கொறவப்பொத்தானை வீதி பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைந்துள்ள உணவம் ஒன்று சுகாதாரபிரிவினரால் இன்று தனிமைப்படுத்தப்பட்டதுடன், சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் அமைந்துள்ள உணவகங்களில் பணிபுரிபவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனையினை முன்னெடுப்பதற்கும், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவும் சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வருமாறு கடந்த இரு தினங்களிற்கு முன்பாக பணிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த உணவகத்தில் பணிபுரியும் சிலர் சுகாதாரவைத்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் சுகாதாரபரிசோதகர்களால் குறித்த உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது.
இதேவேளை தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை முன்னெடுக்கச் சென்ற சுகாதார பரிசோதகர்களுடன் குறித்த உணவகத்தின் ஊழியர்கள் சிலர் முரண்பட்டிருந்தனர். இதனையடுத்து சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து ஐந்து பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.






