வவுனியா சிங்களபிரதேசசபையின் தவிசாளர் பதவி தேசியமக்கள் சக்தி வசம்
வவுனியா தெற்கு சிங்களபிரதேச சபையில் தேசியமக்கள் சக்தியை சேர்ந்த சுதர்சன சாமர வீரக்கோன் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதிதவிசாளராக ஐக்கியமக்கள் சக்தியின் குணபால சரத்மது தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபைக்கான தவிசாளர்,உப தவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், பிரதேசபை மண்டபத்தில் இன்று(16) மாலை நடைபெற்றது.
இரகசிய வாக்கெடுப்பு
இதன்போது தவிசாளர் தெரிவிற்கு இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. தேசியமக்கள் சக்தி சார்பில் சுதர்சன சாமர வீரக்கோன், மற்றும் சுயேட்சைகுழு சார்பில் கசுன் சுமதிபால ஆகியவர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டது.
இதன்போது குறித்த தெரிவினை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடாத்துமாறு 10பேரும் பகிரங்கமாக நடாத்துமாறு 7பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவுகள் இரகசிய வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது.
உப தவிசாளர் பதவி சஜித் அணி வசம்
வாக்களிப்பு முடிவுகளின் படி தேசியமக்கள் சக்தியின் உறுப்பினருக்கு 12வாக்குகள் கிடைக்கப்பெற்றன. சுயேட்சை குழு உறுப்பினருக்கு 5 வாக்குகள் கிடைக்கப்பெற்றது. தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர் சுதர்சன சாமர வீரக்கோன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உப தவிசாளராக ஐக்கியமக்கள் சக்தியின் உறுப்பினர் குணபால சரத்மது வின் பெயர் பிரேரிக்கப்பட்டது. வேறு உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாமையினால் போட்டியின்றி அவர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
