மதத்தை அவமதிக்கும் வகையில் வெடுக்குநாறி மலையில் அத்துமீறிய தொல்பொருட் திணைக்களம்!
நேற்றைய தினம் நடைபெற்ற வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யும் நிகழ்விற்கு தொல்பொருட் திணைக்களம் தடை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டிருந்தது.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அழிக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்வதற்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து, நேற்றையதினம் காலை ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
புதிய விக்கிரகங்கள் வேண்டாம்
குறித்த செயற்பாட்டினை கண்காணிக்கும் நோக்குடன் தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் ஆலய வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இந்தநிலையில், விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு தடையை ஏற்படுத்தும் நோக்குடன், புதிய விக்கிரகங்களை வைக்கவேண்டாம் எனவும், ஏற்கனவே இருந்த விக்கிரகங்களையே மீள வைக்குமாறும் காவல்துறையினர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பை வெளியிட்ட ஆலயத்தரப்பினர், முன்னர் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள் முழுமையாக உடைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளது எனவும், உடைந்த சிலைகளை மீண்டும் எப்படி வைக்க முடியும், எமது சமய நடைமுறைப்படி அது முறையான செயற்பாடு இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிகாரிகளுக்கும், ஆலய நிர்வாகத்திற்கும் இடையில் சற்றுநேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்தது.
இருப்பினும், சற்றுநேரத்தில் திட்டமிட்டபடி அனைத்து புதிய விக்கிரகங்களும் வைக்கப்பட்டது.
பாதணிகளுடன் உயர் அதிகாரிகள்
இதேவேளை, நேற்றையதினம் ஆலய வளாகத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் மற்றும் தொல்பொருட் திணைக்கள உத்தியோகத்தர்கள் தமது பாதணிகளுடன் ஆலய வளாகத்தினுள் நின்றனர்.
இதனால் விசனமடைந்த பொதுமக்கள் உயர் பொறுப்புக்களில் உள்ள அரச அதிகாரிகள் சமய விடயங்களில் ஒழுக்கவீனமாக நடந்து கொண்டிருந்தமைக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
