'தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை' - கருத்துக் கூறிய முன்னாள் போராளிக்கு அச்சுறுத்தல்
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உயிரோடு இல்லை எனக் கூறியமையால் தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதாக முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
தற்கொலை செய்வதற்கும் தயார்

“கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிபிசி நிறுவனத்திற்கு அண்ணன் வருவார் என்ற பழநெடுமாறனின் கருத்துக்கு, அண்ணன் இல்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தேன்.
அதனைத் தொடர்ந்து சில ஊடகங்களும் இதுதொடர்பான கருத்துக்களை கேட்டதன் அடிப்படையில் அண்ணன் இல்லை என்ற கருத்தை வழங்கி இருந்தேன்.
இதனையடுத்து கடந்த சில நாட்களாகவே நான் அச்சுறுத்தலுக்கு உள்ளாக கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் இருந்தும், இங்கே இருக்கும் புனர்வாழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினுடைய தலைவர் இன்பராசாவும் அச்சுறுத்தலை கொடுத்திருந்தனர்.
அத்தோடு நான் இராணுவம் மற்றும் கருணாவுடன் பணியாற்றுவதாகவும், வட்டுவாகலில் இருந்து போராளிகளை காட்டிக்கொடுத்ததாகவும், சில கருத்துக்களை என்னிடம் தெரிவித்தார்.
அது சார்ந்த முகப்புத்தக பதிவுகளையும் மேற்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் சார்ந்து கரிசனைப்பட வேண்டிய தேவை இல்லை என்பதுடன், உண்மையை பேச வேண்டியவனாகவே நான் இருக்கிறேன்.
துவாரகா மற்றும் சாள்ஸ், பாலச்சந்திரன், அண்ணனையோ அல்லது அண்ணியையோ யாரையாவது கொண்டுவந்து நிறுத்துவார்களேயானாலும், எனது கருத்து தவறான கருத்தாக இருந்தாலும் தற்கொலை செய்வதற்கும் தயாராக உள்ளேன்.
அண்ணன் இல்லை என்ற எனது கருத்தானது ஒரு தற்கொலைக்கு ஒப்பானதாகும். ஏன் எனில் பாரிய மாபியாவை எதிர்கொள்ள முடியாமலும், இதனை வைத்துக்கொண்டு புலம்பெயர் தேசத்திலும் இங்கும் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்ற நிலைமையும், போராளிகள் நடுத்தெருவில் வாழ்கின்ற இழிநிலையில் எங்களுக்கு வேறான தெரிவில்லை என்ற நிலைமையிலேயே தற்கொலைக்கு ஒப்பானதான அண்ணன் இல்லை என்ற பதிலை தெரிவித்தித்தோடு உண்மையான கருத்துக்களை சொல்ல வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.
அண்ணன் இல்லை என்ற கருத்தை கூறும் போது எங்களுக்கு மிகுந்த வலியையும், வேதனையையும் ஏற்படக்கூடிய விடயமாகும்.
ஆனால் 13 வருடங்கள் கடந்து 14வது வருடத்திற்கு வந்திருக்கின்ற இந்நேரத்திலே, 129 வயது இருக்க கூடிய சுபாஸ் சந்திர போஸ் தற்போதும் உயிருடன் இருக்கிறார் என்று கூறிக் கொண்டிருப்பதை போன்ற அதே நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காவே இதனை கூறியிருந்தேன்.
இந்திய விடுதலைப்போராட்டம்

இந்திய விடுதலைப்போராட்டத்திற்காக போராடிய சுபாஸ் சந்திர போஸ் மற்றும் அவரது அமைப்பு இந்திய அரசியலுக்குள்ளே வராமல் பிரிட்டிஷ் ஆதரவுக்காரர்களே வந்திருந்தனர்.
இங்கும் இராணுவத்துடன் திரிபவர்கள், சிறையிலே அடைக்கப்பட்டவர்கள், பெண்கள் தொடர்பான பிரச்சினைகளிற்காக சிறையிலே அடைக்கப்பட்டவர்கள், வேறு புலனாய்வு கட்டமைப்புடன் வேலை செய்பவர்கள்தான் இங்கே கோலோச்சிக்கொண்டு இருக்கின்றனரே ஒழிய போராளிகள் நாங்கள் பதுங்கி இருக்க வேண்டிய நிலைமையே காணப்படுகிறது.
தயவு செய்து மக்களாகிய நீங்களும் ஊடகங்களும் இதனை விளங்கிக்கொண்டு எமக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும்” - என தெரிவித்தார்.