அதிரவுள்ள நாடாளுமன்றம் - வருகிறார் ஞானசார தேரர்
எமது மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை(Ven. Galagodatte Gnanasara Thera) நியமிக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அத்துரலியே ரத்ன தேரர் வகித்து வரும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலேயே ஞானசார தேரர் நியமிக்கப்படவுள்ளார்.
அத்துரலியே ரத்ன தேரர் கடந்த ஜனவரி மாதம் எமது மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். மூன்று அல்லது ஆறு மாதங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, அதனை ஞானசார தேரருக்கு வழங்க வேண்டும் என்ற வாக்குறுதிக்கு அமையவே ரத்ன தேரர், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக எமது மக்கள் சக்தி கட்சி கூறியுள்ளது.
எனினும் வழங்கிய வாக்குறுதியை அத்துரலியே ரத்ன தேரர் மீறியுள்ளதாக அந்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் தான் எந்த தரப்பினருடனும் வாய்மொழி மூலமோ அல்லது எழுத்து மூலமோ அப்படியான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் அத்துரலியே ரத்ன தேரர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரத்ன தேரர் மீது சுமத்தப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுக்களுக்கு அவர் குற்றவாளி என தீர்மானித்த கட்சியின் அரசியல் சபை மற்றும் செயற்குழு என்பன அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளன.
அத்துடன் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அத்துரலியே ரத்ன தேரரை நீக்குமாறு கோரி, எமது மக்கள் சக்தி கட்சி தேர்தல் ஆணைக்குழுவிற்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி டயானா கமகேவை கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பான சூடு தணியும் முன்னர், எமது மக்கள் சக்தி கட்சி ரத்ன தேரரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளது.
டயானா கமகேவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.