பிரதேச செயலகத்தின் வேறுபட்ட முடிவால் வெற்றிலைக்கேணியில் பரபரப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி சென் செபஸ்டியன் விளையாட்டுக் கழக மைதானத்தில் அதிகளவான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, வெற்றிலைக்கேணி சென் செபஸ்டியன் விளையாட்டுக் கழகத்தினுடைய மைதானம் 2011ஆம் ஆண்டிலிருந்து அமையப்பெற்றுள்ளது.
குறித்த இடத்தில் மைதானம் அமைப்பதற்கு அப்போதைய பிரதேச செயலர் அனுமதி வழங்கியிருந்தார்.
விளையாட்டுக் கழகம்
இதன் அடிப்படையில் 2011ஆம் ஆண்டு குறித்த இடத்தில் மைதானம் அமைத்து சென் செபஸ்டியன் விளையாட்டுக் கழகம் விளையாட்டுச் செயற்பாடுகளை இதுவரை காலம் முன்னெடுத்து வந்தது.
பிரதேச செயலகத்தால் கொடுக்கப்பட்ட அனுமதியின் பேரில் மைதானத்தைச் சுற்றி மதில் செபஸ்டியன் விளையாட்டுக் கழகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனிநபர் ஒருவர் குறித்த பகுதியில் தமக்கான உறுதிக்காணி இருப்பதாகக் கூறி மைதானம் அமைந்துள்ள பகுதியில் தூண்களை அமைக்க முனைந்தவேளை கழக வீரர்களுடன் முறுகல் நிலை ஏற்பட்டது.
விளையாட்டுக் கழகத்தினர் குறித்த நபரிடம் உறுதியைக் கேட்ட போது உறுதி இல்லை என்றும் பிரதேச செயலகத்தில் அதற்கான ஆவணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு மைதானம்
இது தொடர்பாகப் பிரதேச செயலகத்தைத் தொடர்புகொண்ட போது மைதானம் அமைந்திருக்கும் பகுதி குறித்த நபருடைய காணியெனப் பிரதேச செயலகத்தில் அடையாளப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு என்று சொன்னால் குறித்த தனியாருடைய காணியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்குப் பிரதேச செயலகம் எவ்வாறு அனுமதி வழங்கியது என்று விளையாட்டுக் கழக வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரதேச செயலகத்தின் தவறான முடிவால் மக்கள் மத்தியில் முரண்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே பல வருடங்களாகப் பாவனையில் இருக்கின்ற விளையாட்டு மைதானத்தின் காணியை விட்டு அதற்கு மாற்றுக்காணி ஒன்றை வழங்குமாறு கழகத்தினர் பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

