ரணிலின் எதிர்பார்ப்பு அடியோடு நிராகரிப்பு
சர்வகட்சி அரசாங்கத்தில் தான் இணையவுள்ளதாக வெளியான செய்தியை தேசிய சுதந்திர முன்னணின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மறுத்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணின் தலைவர் விமல் வீரவன்ச சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
ரணிலின் எதிர்பார்ப்பு நிராகரிப்பு
அதிபரின் இந்தக் கருத்தை மேற்கோள்காட்டி வெளியான செய்திகளை மறுப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் நெருக்கடியை தீர்ப்பதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதே சிறந்தவழியென தாமே முதலில் சுட்டிக்காட்டியதாகவும் என்னினும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அதனை ஏற்கவில்லையெனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடமும் இதுதொடர்பில் வலியுறுத்தியதுடன், நெருக்கடியை தீர்ப்பதற்கும், தேசிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கும் 12 முன்மொழிவுகள் அடங்கிய தீர்மானத்தை முன்வைத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சர்வகட்சி மாநாட்டில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய 10 முன்மொழிவுகளை ரணில் விக்ரமசிங்கவும் அனுப்பிவைத்துள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தகட்ட நகர்வுகள்
சர்வ கட்சிகளின் ஒருமித்த கருத்துடன், தேசிய வேலைத்திட்டத்தை அனைத்துக் கட்சி அரசாங்கம் செயற்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள விமல் வீரவன்ச, இதுதொடர்பில் கண்காணித்து தமது அடுத்தகட்ட நகர்வுகள் இடம்பெறுமென தெரிவித்துள்ளார்.
தமது ஆலோசனைகளை கருத்தில் கொண்டு தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தபடுவதுடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்துடன் தாம் இணைந்தால் அதனை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிப்போமெனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.