மத்தியவங்கி கொள்ளையர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டாபயவின் உறுதியான நிலைப்பாடு இதுவே!
மத்திய வங்கியைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மற்றும் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் மேற்கொள்ள காரணமாக இருந்தவர்கள், பின்புலத்தில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்க வேண்டும்
என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2019 சீயோன் தேவாலய குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் உட்பட 5 பேருக்கு எதிராக பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் செய்த வழக்கு விசாரணைக்காக நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில் இருந்து வெளியே வந்த இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலால் இடம்பெற்ற போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் முகமட் ஆசாத் என்பவரால் இந்த பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது 30க்கும் மேற்பட்டவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்தவர்கள் கூட சில நாட்கள் மாதங்கள் கழிந்து இறந்தார்கள். ஆகவே இவ்வாறு மிலேச்சத்தனமான கொடூரமான தாக்குதல் சீயோன் தேவாலயத்தில் மேற்கொண்ட அந்த பயங்கரவாதியின் உடல்பாகங்களை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நானும் எனது இணைப்பு செயலாளர் யோ.றொஸ்மன், மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி, திருமதி அ.சுசிகலா மற்றும் சி.அனோஜன் ஆகியோர் கலந்து கொண்டோம். அப்போது பொலிசார் கண்ணீர்புகைகளை அடித்து தாக்குதலை மேற்கொண்டனர். இதில் என்னைத்தவிர ஏனைய நான்கு பேரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மக்களுடைய போராட்டத்திலே ஜனநாயக ரீதியாக சட்டத்திற்கு முரணாக இல்லாது ஈடுபட்டவர்கள் பொலிசாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கலகம் விளைவித்தாக எனக்கும் அவர்களுக்கும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த வழக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி கூட இரண்டு விடயத்தை ஆணித்தரமாக கூறியிருக்கின்றார்.
ஒன்று மத்திய வங்கி கொள்ளையை மேற்கொண்டவர்கள் இரண்டாவது ஏப்பிரல் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு காரணமாக இருந்த யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் இந்த விடயத்திலே ஜனாதிபதி உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கின்றார்.
அதைத்தான் நாங்களும் கூறுகின்றோம் எனவும் தெரிவித்தார்.