போர்க் குற்ற விசாரணை தொடர்பில் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' வெளியிட்ட தகவல்
இறுதிப்போரில் இடம்பெற்ற இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதனைவிட சிறிலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போர் கைதிகள் மற்றும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக நியூயோர்க் சென்றிருந்த சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்து கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம்பெயர் தமிழர்களிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
ஐ.நா பொதுச் சபையில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உரையாற்றிய நிலையில், அவரது வருகைக்கு எதிராக புலம் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பான புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில், இனப்படுகொலையினை புரிந்த அரசுடன் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக உரையாடல் நடத்துவது கடினமான ஒன்றாகுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமார் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் பொறுப்புக்கூறல் என்பது முக்கியமானதென அவர் கூறியுள்ளார்.