குருந்தூர்மலை விவகாரம் சிங்களமயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வு; நீதித்துறை எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், படையினர், வெலிஓயா, மகாவலி என பல வழிகளிலும் ஏற்கனவே ஆக்கிரமிப்புக்களும் சிங்களமயமாக்கல் செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் தற்போது குருந்தூர் மலையில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் சிங்கள மயமாக்கும் செயற்பாடு ஆரம்பித்திருக்கின்றது. எனவே இதை சிங்களமயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வாகவே இதனைப் பார்க்கமுடிவதாக முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை தென்னிலங்கையில் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தினை அவமதித்ததாக சிறையிலிடப்பட்டுள்ளார்.
வடபகுதியிலே நீராவியடிப்பிள்ளையார் கோவில் விவகாரத்தில் ஞானசார தேரரும், குருந்தூர்மலை விவகாரத்தில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரம நாயக்கவும், பொலிசார், இராணுவம் உட்பட பலரும் நீதிமன்றக் கட்டளைகளை மீறியுள்ளனர். இதற்கு நீதித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது. என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள மக்கள் தொடர்பகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் கோவில், இந்துமக்கள் காலாதிகாலமாக வழிபட்டுவந்த தலமாகும். இந்த இந்து ஆலயத்தின் அடையாளங்கள் யாவும் தற்போது அழிக்கப்பட்டுள்ளன.
அரசின் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தொல்லியல் ஆய்வுக்கென ஆரம்ப நிகழ்வினை 18.01.2021அன்று ஆரம்பித்து வைத்திருந்தார். அப்போது அங்கே இராணுவம் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு இன்னொரு நாட்டில் படைகளைக் கொண்டுபோய்க் குவிப்பதைப் போல அந்த இடம் காட்சியளித்திருந்தது.
எனினும் நீதிமன்ற கட்டளையில் குறிப்பிட்டதைப் போல யாழ் பல்கலைக்கழக தொல்லியல்பீட மாணவர்களோ, அல்லது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களோ யாரும் அழைக்கப்படவில்லை. எல்லாமே சிங்களமயமாக காட்சியளித்திருந்தது.
நாம் சிங்களமக்களுக்கு எதிரானவர்களல்ல. சிங்கள இனவாதிகளுக்கு எதிராகவும், இனவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகவுமே நாம் எமது கருத்துக்களை வெளியிடுகின்றோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையில் ஆய்வு என்ற பெயரில் அடுத்தகட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவே எம்மால் பார்கமுடிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வனஜீவராசிகள் திணைக்களம் என்ற பெயரில் 2017.01.24ஆம் திகதி வர்த்தமானி மூலம் நந்திக்கடல் 4141ஹெக்டயர், நாயாறு 4464ஹெக்டயர் மொத்தமாக 21,515 ஏக்கர் நீர்ப் பரப்பும், நிலப்பரப்புமாக வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதேவேளை கடந்த 2018.09.04 அன்று குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கும் நோக்கோடு இரு பௌத்த பிக்குகள் அடங்கலான 12 பேர் கொண்ட குழுவினர் வருகைதந்தனர்.
அவர்களின் வருகையினை குமுழமுனைப் பகுதி மக்களோடு இணைந்து நாம் தடுத்திருந்தோம். அதன் பின்னர் இது தொடர்பில் கடந்த 06.09.2018 அன்று பொலிசாரால் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில் கடந்த 27.09.2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது பிக்குமார் தலைமையிலான குழுவினருக்கு சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குழப்பங்களை விளைவித்ததாக நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
அதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நீதிமன்றத்தின் தீர்ப்பினை இங்கு பலரும் மீறியுள்ளனர். பெரும்பாலும் தமிழ் மக்கள் பொதுவிடயங்களில் நீதிமன்றத் தீர்ப்புக்களை மீறுவதில்லை.
எனிம் தென்னிலங்கையில் ஒருவிதமாகவும் வடபகுதியில் இன்னொரு விதமாகவும் நீதிமன்றத்தின் தீர்புக்களை மீறுபவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தினை அவமதித்ததற்காக அங்கே சிறை வைக்கப்படுகின்றார். ஆனால் இங்கே வடஇலங்கையிலே நீதிமன்றத் தீர்ப்புக்களை அவமதித்தவர்களுக்கு இவர்கள் என்ன பதிலை வழங்கவுள்ளார்கள்.
குறிப்பாக நீராவியடிப்பிள்ளையார் ஆலய விடயத்தின் போது, பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மீறியிருந்தார்.
தற்போது இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உட்பட இராணுவம், பொலிசார் உட்பட பலர் இந்த குருந்தூர் மலை விடயத்தில் நீதிமன்றத் தீர்பினை மீறியுள்ளனர்.
இதற்கு உரியவர்கள் என்ன பதிலை வழங்கப்போகின்றார்கள். தேர்தல் காலங்களிலே அரசிற்கு ஆதரவழிப்பவர்கள், அரசோடு இணைந்துள்ளவர்கள், அமைச்சுப் பதவிகளைப்பெற்றுள்ளவர்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர்.
குறிப்பாக எமது தமிழர்களின் நிலங்கள், ஆறுகள், குளங்கள், கடல் என அனைத்து வழங்களும் சொத்துக்களும் அபகரிக்கப்படுகின்றன. இதற்கு பன்னாடுகள் என்ன நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளார்கள்.
நிச்சயமாக இந்த விடயத்தில் இந்தியா உட்பட பன்னாடுகள் தலையீடு செய்து எமது பிரச்சினைக்கு தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.