நாமலை அடுத்த அதிபராக்கும் முயற்சி - நகைப்புக்குரியது என்கிறார் சுயாதீன எம்.பி
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை அடுத்த அதிபராக்க சில ஊழல்வாதிகள் முயற்சிப்பதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவெல தெரிவித்துள்ளார்.
கிராம அபிவிருத்தி சபையின் தலைவர் பதவிக்கு கூட தகுதியற்ற நாமல் ராஜபக்சவை அதிபராக்க குறித்த தரப்பினர் முயற்சிப்பது நகைப்புக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்டு, கட்சியின் அடிப்படை கொள்கைக்கு எதிராக செயற்பட்டதால் தாம் கட்சியிலிருந்து விலகியதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவெல சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல் நிறைந்த அரசியல் கட்டமைப்புக்கு எதிராக மக்கள் கடந்த காலங்களில் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறித்த போராட்டம் நாட்டில் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை மக்கள் அரசியல்வாதிகளுக்கு மறக்க முடியாதொரு பாடத்தை கற்பித்தும் அதனை சிறிலங்கா பொதுஜன பெரமுனவர் இதுவரை கற்றுக் கொள்ளவில்லை என லலித் எல்லாவெல குறிப்பிட்டுள்ளார்.
அதிபரின் கால அவகாசம்

பலவீனமடைந்துள்ள அரசியல் கட்சிகள் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது காலவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதனை பொதுஜன பெரமுனவினர் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர்
தமக்கான பாடத்தை கற்றுக் கொள்வார்கள் என லலித் எல்லாவெல மேலும் தெரிவித்துள்ளார்.