சிங்கள இராவணன் - இதிகாச வரலாற்றின் உண்மைதான் என்ன..!
அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இராவணனை ஒரு சிங்கள மன்னனாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அடையாளப்படுத்தியிருந்தமையானது பல தரப்புக்களிலும் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஐபிசி தமிழின் எழுதும் கரங்கள் நிகழ்ச்சியில் யார் இந்த இராவணன் எனும் நூலின் ஆசிரியரான கலாநிதி கலாபூசனம் வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ் திருச்செல்வம் அவர்களுடனான நேர்காணலின் மூலமாக உண்மையிலே இந்த இராவணன் யார்? அல்லது இதிகாச கதைகளின் வாயிலாக அதனை கடந்து செல்ல வேண்டுமா என்பதனை இப்பதிவின் வாயிலாக காணலாம்.
இதன்படி, இராவணன் ஒரு சிங்கள மன்னனா? என தொகுப்பாளர் முன்வைத்த கேள்விக்கு நூலாசிரியர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்.
இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம்
“இராவணன் சிங்கள மன்னன் என்று கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை. அதேசமயம் இராவணனை ஒரு சிங்கள மன்னனாக அடையாளப்படுத்த அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களும் சித்தரிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.
இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தில் விஜயனின் வருகையின் பின்னரே சிங்கள வம்சம் இங்கு தோற்றம் பெற்றதாக குறிப்பிடுகின்றது.
அத்துடன், இலங்கை வரலாற்றிலே விஜயன் தான் முதல் மன்னனாக குறிப்பிடப்பட்டுள்ளான். இராவணனை பற்றி இங்கு எந்தவித குறிப்புக்களும் இல்லை.
ஒருவேளை, இராவணன் சிங்கள மன்னன் என்றால் இலங்கையின் வரலாற்று நூலில் ஏன் அவர் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறவில்லை?
அத்துடன், இராமாயணத்திலும் இராவணன் சிவனை வழிப்பட்டான் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சிங்கள மக்கள் ஒரு காலத்திலும் சிவனை வழிப்பட்டார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.
இன்றுவரை சிவனை வழிப்பட்டவர்கள் தமிழர்கள் மாத்திரமே.
பிராமி கல்வெட்டுகள்
அதேபோல தேவநம்பிய தீசனுடைய காலத்திலேதான் இலங்கைக்கு பௌத்த மதம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரே பிராமி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டது.
அக்கல்வெட்டுகளில் சிங்கள என்றோ சிகள என்றோ எவ்வித குறிப்புக்களும் இடம்பெறவில்லை.
ஆனால், பத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் தமிழர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சிங்கள இனம் இங்கு வாழ்ந்தமைக்கான குறிப்புக்களே இல்லாத போது இராவணனை எப்படி சிங்கள மன்னனாக அடையாளப்படுத்த முடியும்” என்றார்.
