நான் எதற்காக அதிகாரத்தைக் கோருகின்றேன்! விளக்குகிறார் எதிர்க்கட்சித் தலைவர் (படங்கள்)
நாட்டிற்காக சேவையாற்றவே அதிகாரத்தைக் கோருகின்றேன். அதிகாரத்தைக் கைப்பற்றும் முன் தன்னால் முடிந்தவரை சேவைகளை மேற்கொண்டு அதை முன்னுதாரணமாக காண்பித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கட்டுக்கதைகளை எதிர்ப்போம். மீண்டும் ஏமாற்ற இடமளியோம். மாயை, அறியாமை, ஏமாற்று மற்றும் வஞ்சகம் ஆகியவற்றால் நாம் இனி ஒருபோதும் ஏமாந்து விடக்கூடாது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து உண்மையான யதார்த்தவாத பயணத்திற்கு அணி திரள வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய ஒருங்கமைப்பு படையணியின் பதுளை மாவட்ட செயற்குழு அங்குரார்ப்பண கூட்டம் இன்றைய தினம் பதுளை நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த கொரோனாவின் தொடக்கத்தில், அரச அதிகாரம் இல்லாவிட்டாலும் கூட ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்கான தனது பொறுப்பை நிறைவேற்ற பாடுபட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு, சத்கராய மற்றும் பிரபஞ்சம் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் இந்த நாட்டிற்கு பெறுமதி சேர்க்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.
அதிகாரத்தில் இருப்பவர்களோ அல்லது அதிகாரத்தை பெற கனவு காண்பவர்களோ அப்படிப்பட்ட சேவை சார்ந்த வகிபாகத்தை ஆற்றியிருக்கிறார்களா என மனசாட்சியுடன் வினவிப்பார்க்கட்டும்.
நாட்டிற்காக சேவையாற்றவே தான் அதிகாரத்தைக் கோருவதாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றும் முன் தன்னால் முடிந்தவரை சேவைகளை மேற்கொண்டு அது முன்னுதாரணமாக காண்பித்துள்ளது.
கொலைகாரர்கள், கொள்ளையர்கள், போதைவஸ்துகாரர்கள் மற்றும் திருடர்கள் ஆகியோரைப் பாதுகாக்க தான் ஒரு போதும் முன் நிற்கமாட்டேன். ஐக்கிய மக்கள் சக்திக்குள் இவ்வாறான மோசடிக்காரர்களுக்கு ஒருபோதும் இடமில்லை.
தம்மைச் சூழவுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகளால் இன்று நாடு முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்நாட்டு விவசாயிகள் அந்த துரதிஷ்டமான கதியையே எதிர்நோக்கியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.