சுசிலின் பதவி பறிப்பு - காலத்திற்கு ஏற்ற நடவடிக்கை அல்ல என்கிறார் விமல்
சிறிலங்கா அரசியலில் பல்லாண்டு கால அனுபவத்தைக் கொண்டுள்ள கலாநிதி சுசில் பிரேமஜயந்தவை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் அமைச்சரவை அமைச்சரான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.
பிரேமஜயந்தவை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை காலத்திற்கு ஏற்ற நடவடிக்கை அல்லனெ அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம்ஜயந்த நீக்கப்பட்டமையானது அரசாங்கத்திற்கு தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய தருணத்தில் அனைத்து தரப்பினரும் ஐக்கியமாக செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் நாட்டு மக்களும் நாடும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அதற்கான தீர்வை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவரை புறம் தள்ளுவது தேவையற்ற ஒன்றென விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
சுசில் பிரேம்ஜயந்த தொடர்பில் அமைச்சரவையில் சில விடயங்கள் விவாதிக்கப்பட்டதையும் விமல் வீரவன்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதற்கு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.