அரசாங்கத்தை விரட்ட மும்முரம் காட்டும் விமல் அணி! மக்களுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்
அரசாங்கத்தை வீழ்த்தி சிறந்த அரசாங்கத்தை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் கைத்தொழில்துறை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச (Wimal Weerawansha) அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கோட்டை சிறிகல்யாணி தர்ம சங்க சபையின் மகாநாயக்கர் இத்தபானே தர்மலங்கார தேரரை சந்தித்து அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமல் சடலத்தை போன்று உணர்வில்லாமல் இருக்கிறது. நாடாளுமன்றின் ஊடாக அரசாங்கத்தை வீழ்த்தி சிறந்த அரசாங்கத்தை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையினை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பலம் வாய்ந்த நாடுகள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உரிய திட்டங்களை செயற்படுத்தியுள்ளன என்பதை அரசாங்கத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் நன்கு அறிவார்கள்.
அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டு விட்டது. மூடர்களே வெளியேறுங்கள் என நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்து போராட வேண்டும்.
மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கும், ஆள்பவர்களுக்கும் கிடையாது. நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு சொந்தமான அச்சகம் உள்ளதால் அவர் எண்ணம் போல் நாணயம் அச்சிடுவார்.
பண வீக்கம் தீவிரமடைவதால் ஏற்படும் பாதிப்பு அவருக்கு தாக்கம் செலுத்தாது. நாட்டு மக்கள் நடப்பு நிலவரங்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.