கணவரை விடுவிக்க காவல்துறை பொறுப்பதிகாரிக்கு பெருந்தொகை இலஞ்சம் வழங்க முற்பட்ட பெண் கைது
கணவரை விடுவிக்க இலஞ்சம்
அவிசாவளை காவல்துறையின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு (OIC) ரூபா 250,000 இலஞ்சம் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (20) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து, அவிசாவளை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் விநியோகித்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
35 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி அவிசாவளை காவல்துறை குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியிடம் அவருக்கு ரூ. 250,000 இலஞ்சமாக தருவதாகவும் சந்தேக நபரான தனது கணவரை பிணையில் விடுவிக்குமாறும் கோரியிருந்தார்.
பணம் பெறுவதற்கு ஒப்புக்கொண்ட பொறுப்பதிகாரி, சீதாவகபுர காவல் பிரிவுக்கு இது தொடர்பில் அறிவித்ததுடன், இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளார்.
முதற்கட்ட தொகை
முதற்கட்டமாக ரூ.150,000 செலுத்துவதற்காக வந்த போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 32 வயதுடைய அவிசாவளை பகுதியைச் சேர்ந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவரின் நடவடிக்கைகள் தொடர்பில் அவிசாவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.