இந்தியா உள்பட உலக நாடுகள் ஒன்றிணைந்து ஆதரித்தால் தமிழர் தேசம் மலரும் : சரவணபவன் பேச்சு
உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியா உட்பட உலக நாடுகள் தமிழர்களின் வாழ்வியல் உரிமையை நிலைநாட்ட உறுதி பூண்டு ஒன்றிணைந்தால், தமிழர் தேசம் அமையும் என்று இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் பெங்களூருவில் உள்ள பா.சு.மணி நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்த இதழியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குனருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் கலந்து கொண்டார்.
அளிக்கப்பட்ட சிறப்பு
அவருக்கு தினச்சுடர் மாலை நாளிதழ் ஆசிரியர் பா.தே.அமுதன், பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் ஆகியோர் பொன்னாடை, மாலை, தலைப்பாகை அணிவித்து, திருவள்ளுவர் சிலை மற்றும் புத்தகங்களை வழங்கி சிறப்புச் செய்தனனர்.

அதை தொடர்ந்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் சி.இராசன், கர்நாடக மாநில திராவிடர் கழக தலைவர் குணவேந்தன், கர்நாடக தமிழ் பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் தனஞ்செயன், புலவர் கார்த்தியாயினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வில் பங்கேற்ற ஈஸ்வரபாதம் சரவணபவன் பேசும்போது, சொந்த மண்ணில் இருந்து வெளியில் வந்து கர்நாடக மண்ணில் தமிழர்களை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டை கடந்து, கர்நாடக மாநிலத்தில் தமிழ் பத்திரிகையாளர் சங்கம், சிறப்பான நூலகம் அமைத்து சேவை செய்துவருவது சிறப்பாகும்.
தமிழ்த் தேசம் அமைய வேண்டும் என்ற அரை நூற்றாண்டு கால கனவு
இலங்கை மண்ணில் தமிழ்த் தேசம் அமைய வேண்டும் என்ற எங்களின் அரை நூற்றாண்டு கால கனவு தற்போது குறைந்து போய் இருந்தாலும் அதற்காக சிந்தப்பட்ட ரத்தம், கொட்டிய வியர்வை, இழந்த உயிர்கள், பறிக்கப்பட்ட உரிமைகள், அனுபவித்த கொடுமைகள் இன்னும் எங்கள் உள்ளங்களில் இருந்து மறையாமல் உள்ளது.

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால், நிச்சயம், தமிழீழம் மலர்ந்திருக்கும். இந்திராகாந்தியின் மறைவால், தமிழ் தேசம் அமையும் கனவு சிதைந்து விட்டது.
தமிழ்த் தேசம் அமைய வேண்டும் என்பது இலங்கையில் வாழும் தமிழர்களின் விருப்பமாக மட்டுமல்லாமல், இந்தியா உட்பட உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் விருப்பமாகவுள்ளது.
இந்தியா உள்பட உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்
இந்த விருப்பம் நிறைவேற வேண்டுமானால், இந்தியா உள்பட உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும். உலகில் மிக பெரிய ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியா, தமிழ் தேசம் அமைவதற்கான வழியை காட்ட வேண்டும்.

தமிழ்த் தேசம் அமைய நாங்கள் அதிகமான போராளிகளை எமது தேசத்தில் விதைத்துள்ளோம். அது கண்டிப்பாக ஒருநாள் முளைத்து மலரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் பேராசிரியை சிவகனி, கோ.கருணாநிதி, பெங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகி பாரி, ராஜகுரு, சாய் ரமணா, சங்கர்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |