கொழும்பு நகருக்குள் வேகமாக பரவும் கொரோனா! வைத்திய அதிகாரி எச்சரிக்கை
கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு நகர எல்லையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் வேலைக்காகச் செல்லும் சிலர் முகக் கவசம் அணியாமல் நடந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் சிலர் முகக்கவசம் அணிவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதாரப் பழக்கவழக்கங்கள்
கொழும்பு நகர எல்லைக்குள் கொரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் பாதுகாப்பான முறையில் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், முகக் கவசம் அணிதல், கைகளை சவர்க்காரத்தினால் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
தற்போதைய காலகட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் 60 வயதுக்கு மேற்பட்டோர் மரணிப்பது குறிப்பிடத்தக்கது.