கருவாடு உற்பத்தியாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
கருவாடு உற்பத்தியாளர்களுக்கு நட்டஈடு வழங்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(05) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற நீர்கொழும்பு பகுதியில் கருவாடு உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இக்கலந்துரையாடலில், கருவாடு உற்பத்தியில் ஈடுபடும் தரப்பினர் கருத்து தெரிவிக்கையில்,
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்
“தாங்கள் நீர்கொழும்பு களப்பு மற்றும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக தங்களது தொழிலுக்கும் பாதிப்பு, இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தினால் கடற்கரையில் கருவாடு உலர வைக்கும் நடவடிக்கைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, அதனால் எமது பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக அவதானம் செலுத்தி, எங்களுக்கும் நட்ட ஈடு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதன்போது, கருவாடு உற்பத்தியாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடுகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, கடற்றொழில் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கும் நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் கருவாடு உற்பத்தி தொழிலில் ஈடுபடுவோருக்கும், அவர்கள் எதிர்கொண்ட பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கான நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.