யோஷித - கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, அழைப்பாணை கிடைக்கப் பெற்றதும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
இதன்போது, சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (03) 8 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பிரித்தானிய அரச கடற்படை கல்லூரி
வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய 2006 செப்டம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் யோஷித ராஜபக்ச பிரித்தானியாவில் உள்ள ' பிரித்தானிய அரச கடற்படை கல்லூரியில்' பயிற்சி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சியில் பங்குபற்றுவதற்கான தகுதிகள் இல்லாத நிலையிலும் நடைமுறைகளை மீறி யோஷித ராஜபக்ச முறையற்ற விதத்தில் அரச நிதியிலான இந்த சலுகையைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |